செவ்வாய், 31 மார்ச், 2015

சில்ட்ரன் ஆப் ஹெவன்

சில்ட்ரன் ஆப் ஹெவன்


விஜய் டிவியில் போடும் டப்பிங் படங்கள் தான் உலக சினிமா என்ற அளவிற்குதான் ஞானம் இருந்தது . ரா.கி.ரங்கராஜனின் மொழி பெயர்ப்பில் பட்டாம்பூச்சி படித்த பிறகு அதை சினிமாவாக பார்க்கும் ஆசை வந்தது. பாப்பிலோன் (Papillon) என்ற அந்த படத்தை தேடிபிடித்து பார்த்த போது புத்தகத்தில் படித்த அளவுக்கு ஈர்க்கவில்லை .

பிறகு நபர் ஒருவரின் பரிந்துரையில் கொரிய இயக்குனர் கிம் கி டுக் அவர்களின் ''ஸ்ப்ரிங் சம்மர் பால் வின்டர்'' பார்த்த பிறகு தான் உலக சினிமா என்றால் என்ன என்பது புரிந்தது. ஈரானிய இயக்குனர் மஜீத் மஜிடி அவர்களின் ''சில்ட்ரன் ஆப் ஹெவன்'' பற்றி பல முறை கேள்வி பட்டிருந்தும் இப்போது தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. 


கூலி தொழிலாளி அப்பா, உடல்நலம் சரியில்லாத அம்மா, 8 வயது பையன் , 6 வயது பெண். தன் சகோதரியின் ஷூ வை தைத்து கொண்டு வரும் போது தொலைத்து விடுகிறான். அப்பாவுக்கு தெரிந்தால் திட்டுவார் மேலும் புது ஷூ வாங்க வசதி இல்லை . எனவே ஒரே ஷூவை மாற்றி மாற்றி இருவரும் போட்டுக் கொண்டு ( ஈரானில் பெண்கள் பள்ளி காலையும், ஆண்கள் பள்ளி மதியமும் இயங்கும் ) பள்ளிக்கு செல்கிறார்கள். ஒரு ஓட்ட பந்தயத்தில் 3 ஆம் இடம் வந்தால் ஷூ பரிசு என அறிவிக்கிறார்கள். தங்கைக்கு ஷூ வாங்கி தர போட்டியில் கலந்து கொள்கிறான். என்ன ஆகிறது என்பது மீதி கதை.

அன்பு , பாசம் , வறுமை , இயலாமை , பொறுப்பு , நேர்மை .. இதையெல்லாம் இந்த சின்னஞ்சிறு சிறுவர்களின் வழியாக பார்க்கும் போது மனம் நிறைகிறது. படத்தின் இயக்கம் , ஒளிப்பதிவு பற்றியெல்லாம் கூறும் அளவிற்கு இன்னும் ஞானம் வரவில்லை. இன்னும் சில முறை பார்க்கவேண்டும். நீங்களும் ஒருமுறை பாருங்கள்...

சனி, 14 மார்ச், 2015

அங்க பிரதக்ஷணம்



சோழ நாடு. மாலை நேரம் .. 


அரண்மனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த அம்மன் கோவிலை வலம் வந்து கொண்டிருந்தார் மன்னர் . அரண்மனை தலைமை வைத்தியர் மன்னரை காண வந்தார்.

“ வாருங்கள் வைத்தியரே  

“ வணக்கம் மன்னா.. தங்கள் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது..?

“அருமையாக உள்ளது . எல்லாம் உங்களால் தான் . எப்படி குணப்படுத்தினீர்கள். எனக்கு குணமானதும் சொல்வதாக சொன்னீர்கள். இப்போது சொல்லுங்கள் “

“ கூறுகிறேன் மன்னா... நீங்கள் சில மாதங்களுக்கு முன் படுத்த படுக்கை ஆகிவிட்டீர்கள் . நான் எவ்வளவோ முயற்சித்தும் குணம் ஆகவில்லை. உங்களுக்காக நிறைய வைத்திய சாஸ்திர நூல்களை ஆராய்ந்தேன். அதில் தான் இந்த முறையை கண்டுபிடித்தேன். நம் உடலின் சில பகுதிகளில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் நம் நரம்பு மண்டலத்தை தூண்ட முடியும். சீன தேசத்தில் சிறிய ஊசிகளை உடலெங்கும் குத்தி சிகிச்சை செய்கிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் மிகவும் எளிய முறையை வடிவமைத்து உள்ளனர். 

சீரான புள்ளிகள் அமைக்கப்பட்ட குறிப்பிட்ட ரக கருங்கல்லில் அதிகாலையில் சில முறை உருள வேண்டும். அது போல சில நாட்கள் செய்தால் நரம்புகள் தூண்டப் பட்டு நோய்கள் குணமாகும். அதே நேரத்தில் வெறுமனே தங்களை கல்லில் உருள சொன்னால் யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

நம் ஊர் அம்மன் மீது தங்களுக்கு மிகவும் பக்தி உள்ளது என அறிவேன். எனவே நம் ஸ்தபதி அவர்களிடம் கூறி அதே மாதிரி சக்தியான அம்மன் கோவில் ஒன்றை அரண்மனை வளாகத்தில் நிறுவ சொன்னேன். அதன் பின்னர் கல் தச்சரிடம் கூறி மருத்துவ குணம் வாய்ந்த கருங்கல் பலகைகளை கருவறையை சுற்றி அமைக்க சொன்னேன். நான் குடுத்த சில மூலிகைகளை தடவிக் கொண்டு நீங்கள் அங்க பிரதக்ஷணம் செய்தீர்கள். அம்மன் மீது நீங்கள் கொண்டிருந்த பக்தியும் , கருங்கல்லின் சக்தியும் சேர்ந்து தங்களை குணப்படுத்தியது.’’

“ ஆஹா அற்புதம்.. அற்புதம் ... இன்னும் இதில் வேறு விசேஷம் உண்டா வைத்தியரே...

“ உண்டு மன்னா... அம்மை நோய் கண்டவர்கள் , குணமாகும் தருணத்தில் உடலில் வேப்பிலை சுற்றி ஈர உடையுடன் இடமிருந்து வலமாக அங்க பிரதக்ஷணம் செய்தால் அம்மை முற்றிலும் குணமாகும். தினமும் வெறும் காலில் சில சுற்றுகள் வலம் வந்தால் கால் நரம்புகள் தூண்டப்படும். சிறிது நேரம் பத்மாசன முறையில் அமர்திருந்தால் கூட பலன் கிடைக்கும்.
“அருமை ... ஆனால் இதை வைத்திய சாலையிலேயே செய்யலாமே ... கோவில் எதற்கு.. “

“ என்னதான் மருந்து கொடுத்தாலும் நம்பிக்கை முக்கியம். இறைவனிடம் நம்பிக்கை வைத்து செய்யும் போது மனம் ஒருநிலைப் படுத்தப்படும்

“ மிக்க நன்று வைத்தியரே... நம் சோழ தேசத்தில் உள்ள எல்லா ஆலயங்களிலும் இதை உடனே நடைமுறை படுத்துங்கள். அதே நேரத்தில் இவ்வளவு விவரங்களை கூறவேண்டாம் . பாமர மக்களுக்கு புரியாது. இறைவன் மீது நம்பிக்கை வைத்து செய்தால் உடல் நலன் பெறும் என மட்டும் கூறுங்கள் “

“ அப்படியே ஆகட்டும் மன்னா “

[கால இயந்திரத்தில் சென்று இந்த உரையாடலை கேட்டது – மோகன்,சேலம்.]

இன்று நாம் கோவிலில் அங்க பிரதக்ஷணம் செய்வதும், வலம் வருவதும் , சாமி கும்பிட்டபின் சிறிது நேரம் அமர்ந்திருப்பதும் மேற்சொன்ன காரணத்தால்தான். ஆனால் கருங்கல்லை மறந்துவிட்டு, டைல்ஸ் இல் வலம் வருகிறோம் என்பதை நான் மன்னரிடம் சொல்லவில்லை .

திங்கள், 9 மார்ச், 2015

மெகா சீரியல்கள் - ஒரே கதை

 மெகா சீரியல்கள் - ஒரே கதை


விஜய் டிவியின் சில மெகா சீரியல்களை பார்க்க நேர்ந்தது. அதன் கதை இதோ...

1.சரவணன் மீனாட்சி

மீனாட்சி சரவணனை திருமணம் செய்யாமல் வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்கிறாள். அவனுடனே வாழ்வாளா அல்லது மீண்டும் சரவணனை அடைவாளா என்பதே மீதி கதை 

2.ஆபீஸ்

நாயகன் கார்த்தி க்கும் நாயகி ராஜிக்கும் விவாகரத்து ஆகிவிட , ராசிக்கு வேறு ஒருவனுடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. ராஜி அவனை திருமணம் செய்வாளா அல்லது மீண்டும் கார்த்தியுடன் இணைவாளா என்பது மீதி கதை.

3.கல்யாணம் முதல் காதல் வரை

ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் விவாகரத்து. ஹீரோயின் வேறு ஒருவனுடன் வாழ்கிறாள். ஹீரோ 2வது திருமணம் செய்கிறார். அது ஹீரோயினுக்கு பிடிக்கவில்லை. ஹீரோ 2வது மனைவியுடன் வாழ்வாரா பிரிவாரா என்பது மீதி கதை.

4 .சன் டிவி

இங்கும் இதே செட் அப் தான். சன் டிவியை பொறுத்தவரை எல்லா நாடகத்திலும் நாயகனோ நாயகியோ குறைந்தது 2 திருமணங்கள் செய்கிறார்கள். கலைஞர் டிவியிலும் இதே கதைதான். முறையற்ற உறவுகளை அழுது , ஒப்பாரி வைத்து பார்ப்பவர்களை நம்ப வைக்கிறார்கள் . டிவி பார்க்கும் நம்ம தாய்குலங்களும் “பாவம் அவ ..எவ்வளவு கஷ்டத்தை தான் தாங்குவா ..” என புலம்புகிறார்கள். கடைசியில் இது மன அழுத்தத்தை ஏற்படுத்தி நிஜ வாழ்க்கை உறவுகளை பிரிக்கிறது.

1 கதை
10 டிவிக்கள்
100 சீரியல்கள்
1000 எபிசோட்கள்

[ மெகா சீரியல் பார்ப்பது வீட்டிற்கும் நாட்டிற்கும் மின்சாரத்திற்கும் கேடு.! ]