செவ்வாய், 12 ஜூலை, 2016

வில்வம்‬

30 நாள் 30 மருத்துவம் - நாள் 6


‪‎வில்வம்‬

 
அந்தக்காலத்தில் பாமர மக்களுக்கு நோய்க்கான மருந்துகள் பற்றி சொன்னால் , சரியாக புரிந்துகொள்ள மாட்டார்கள் என்பதற்காக நோய்க்கான மருந்துகளை கோவில்களில் வைத்தார்கள். மேலும் இறைவன் மீது நம்பிக்கை வைத்து கடைபிடிக்கும் போது , நோய் விரைவில் குணமாகும்.

துளசி , வேப்பிலை , மஞ்சள் ,குங்குமம் ,சந்தனம் ,திருநீறு , காவடி எடுத்தல் , மஞ்சள் நீராட்டு , அங்க பிரதட்சணம் ,அலகு குத்துதல் ,மரத்தை வலம் வருதல் , கோவிலை வலம் வருதல் ...எல்லாமே மருத்துவ பலன்களுக்காக ஆலயத்தில் வைக்கப்பட்டவை .

இந்த வரிசையில் மிக முக்கியமானது வில்வம் . அனைத்து சிவன் கோவில்களிலும் வில்வ மரம் இருக்கும், வில்வ தீர்த்தம் வழங்கப்படுகிறது. வில்வ இலையில் தயாரிக்கப்படும் வில்வ தீர்த்தம் உடல் சூட்டை தணிக்கும் , வயிற்றுப்புண் ,ஆண்மைக்குறைவு , நீரிழிவை போக்கும் . வயிற்றுவலி , அஜீரணம் போன்றவற்றை போக்கும். எனவே வில்வத்தை சர்வலோக நிவாரணியாக பார்த்தனர்.

அந்த நாட்களில் குழந்தை இல்லாத தம்பதிகளை ஒரு மண்டலம் ( 48 நாட்கள் ) சிவன் கோவில் சென்று வழிபட சொல்வார்கள் . தினமும் அந்த தீர்த்தத்தை பருகிவிட்டு, ஆலயத்தில் உள்ள வில்வ மரத்தை வலம் வந்து அந்த காற்றை சுவாசிக்கும் போது பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன .

குரானிலும் நபிகள் வில்வத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். இதயத்தை வலுவூட்டுவதாக நபி மருத்துவம் கூறுகிறது. வில்வ பழம் வயிற்று புண் , ஆசன வாய் புண், மூலம் போன்றவற்றை ஆற்றக்கூடியது. வில்வஇலை மலச்சிக்கலை போக்கும்.

வில்வத்தின் , வேர் , பிசின் எல்லாமே மருத்துவ குணம் உள்ளவை.
வில்வ பழ ஜூஸ் , ஜாம் போன்றவை இயற்கை அங்காடிகளில் கிடைக்கிறது.

குறிப்பு : 50 ஆண்டுகளுக்கு மேலான மரத்தில் இருந்து கிடைக்கும் பலன்களே சிறந்த பலனை தரும்.

சின்ன வெங்காய சருகு

30 நாள் 30 மருத்துவம் - நாள் 2


சின்ன வெங்காய சருகு


மூலம் , ஆசனவாய் வெடிப்பு போன்றவற்றிற்கு அருமருந்தாக செயல் படுகிறது சின்ன வெங்காயத்தின் சருகு( மேல் தோல் ) . மேலும் நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும் வரும் முன் காக்கும் மருந்தாக செயல்படுகிறது. சின்ன வெங்காய சருகைக் கொண்டு தலையணை செய்து அதில் அமர்ந்து வந்தால் , மூலம் , ஆசனவாய் வெடிப்பு மூலம் ஏற்படும் வலி குறையும் . தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் ஆரம்பநிலை குறைபாடுகள் நீங்கும்.

வெங்காயம் விற்பவர்கள் சின்னவெங்காயத்தை புடைத்து சுத்தம் செய்துவிட்டு சருகை குப்பையில் போடுவார்கள் . அந்த சருகை வாங்கிவந்து , அதிலுள்ள வேர் ,நார் , குப்பைகள், நீக்கிவிட்டு சுத்தமான சருகை மட்டும் எடுத்துக்கொள்ளவும். காடா துணி அல்லது காட்டன் துணி கொண்டு உங்கள் இருக்கையில் வைக்கும் அளவுக்கு சருகை வைத்துத் தைத்து தலையணை செய்து கொள்ளவும்.


பாதிப்பு உள்ளவர்கள் மட்டுமல்ல , நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களும் இதை பயன் படுத்தினால் மூலம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். முடிந்தவரை குஷன் இருக்கை இல்லாமல் ஒயரில் நெட் போட்ட இருக்கைமீது இதை வைத்து அமர்வது சிறந்தது.

குறிப்பு 1 - குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை சருகை மாற்றவும்.

குறிப்பு 2 - நாட்டு வெங்காய சருகாக இருந்தால் சிறப்பு.


குறிப்பு 3 - இந்த தகவலை என்னிடம் சொன்னது , MBBS , MD படித்த ஆங்கில மருத்துவர்.

குமட்டிக் காய்

30 நாள் 30 மருத்துவம் - நாள் 1


குமட்டிக் காய் 


தலையில் புழுவெட்டு உள்ளவர்கள் , பல மருந்து தேய்த்தும் எந்தவித பலனும் இல்லாதவர்கள் இதை செய்யுங்கள். கண்டிப்பாக பலன்கிடைக்கும். கிராமங்களிலும் , ரயில்வே ஓரங்கள், சாலை ஓரங்களில் வளர்ந்து கிடைக்கும் இந்த காய் எலுமிச்சை அளவில் தர்பூசணி பழத்தைப் போல் இருக்கும்.
பூச்சி வெட்டு பாதிக்கப்பட்ட இடங்களில் அந்த குமட்டி காய்க்குள் இருக்கும் உள் நீரை இரண்டு மூன்று நாட்களுக்கு தொடர்ந்து தொட்டு வைத்தால் , புழுவெட்டு மறைந்து முடி வளரும்.


முடி உதிர்தல், பொடுகு, தலையில் அரிப்பு, புழுவெட்டு உள்ளிட்ட தலை முடி பிரச்னைக்கு, வழுக்கு குமிட்டி காய் பூரண குணமளிக்கும். இதன் விதையை, அருகம்புல்லுடன் சேர்த்து அரைத்து, அம்மை நோயால் ஏற்படும் கொப்புளங்களில் வைத்தால், விரைவில் கொப்புளங்கள் குணமாகும். வழுக்கு குமட்டி காயின் இலையை அரைத்து வீக்கம், வலி உள்ள இடங்களில் வைத்து, மசாஜ் செய்தால், தீராத வலியும் குணமாகும்.

குறிப்பு :
இது விஷத்தன்மை கொண்டது குழந்தைகள் கையில் கொடுக்க வேண்டாம்.காயை பயன்படுத்திய பிறகு கையை நன்கு கழுவி விடுங்கள்.