வியாழன், 9 டிசம்பர், 2010

தபூ சங்கர் கவிதைகள்


தபூ சங்கர் கவிதைகள்:
தபூ சங்கரின் சுய அறிமுகம்

ன் கவிதைகளில் இருக்கிற அளவுக்கு சுவாரசியம் என் காதலில் இருக்குமா என்பது தெரியவில்லை.

ஊரில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்வரை காதலுக்கும் எனக்கும் இருந்த ஒரே சம்பந்தம்... எட்டாம் வகுப்புப் படிக்கும்போது ஒரு காதல் கடிதம் எழுதிக்கொடுத்ததுதான்.

என் கையெழுத்து கொஞ்சம் நன்றாக இருக்கும் என்பதால்... பலமுறை பெயிலாகிப் பெயிலாகி என்னுடன் படித்த பெரியண்ணன் ஒருவன் என்னை எழுதித் தரச் சொன்னதால், அவன் சொல்லச் சொல்ல எழுதித் தந்திருக்கிறேன். அவ்வளவுதான்.

ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்து, நான் பட்டப் படிப்புக்காக காந்திகிராமம் சென்றபோது... அங்கே காதல் தன் முழுப் பரிவாரங்களோடு காத்திருந்தது, என்னை ஆட்கொள்ள.

அவள் அழகி இல்லை; பேரழகியும் இல்லை; அதற்கும் மேல். ஒருத்தியை ஒருவன் காதலிக்கலாம்; அல்லது இருவர் காதலிக்கலாம். ஆனால் ஒரு கல்லூரியே காதலிக்குமா? காதலித்தது அவளை. ஆனால் அவளோ எல்லோரையும் தூசி மாதிரி பார்த்தாள்.

இத்தனைக்கும்... நான் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்த போது அவள் படித்துக்கொண்டிருந்ததோ, பக்கத்திலிருக்கும் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு. அவள் அம்மா எங்கள் கல்லூரியில் பணியில் இருந்ததால் அவள் வீடு கல்லூரிக்குள் இருந்தது.

மாலை நேரங்களில் எங்கள் கல்லூரி மைதானத்தில் தான் தன் தோழிகளோடு அவள் கைப்பந்து விளையாடுவாள். அப்போதெல்லாம் எந்தப் பையனாவது அவளிடம் பேச முயற்சித்தால் திட்டி அனுப்பி விடுவாள்.
ஆனாலும் அவளிடம் பேசுகிற பாக்கியத்தை ஒருவன் பெற்றிருந்தான். அவன் பெண்களின் ஊழியன். எந்தப் பெண் எது சொன்னாலும் உடனே கடைக்குப் போய் வாங்கி வருபவன்.

அவன் அவளிடம் பேச ஆரம்பித்ததை நினைத்து யாருமே வருத்தப்படவில்லை. மாறாக மகிழ்ச்சியே அடைந்தனர். அவன்மூலம் அவளிடம் தங்கள் காதலைத் தெரியப் படுத்திவிடலாம் என்று நினைத்து.
அவள் விளையாடிவிட்டுப் போனதும், அவனை அழைத்து நடுவே உட்காரவைத்து `எங்களில் யார் பேராவது அவளுக்குத் தெரியுமா?' என்று கேட்பார்கள்.

`எனக்குத் தெரியாது' என்பான் அவன்.
`நீ கேட்க வேண்டியதுதானே?' என்பார்கள்.
`எப்படிக் கேக்கறது' என்பான்.
`சரி... நீ சொல்ல வேண்டியதுதானே?' என்பார்கள்.
`எப்படிச் சொல்றது?' என்பான்.

எல்லோரும் மௌனமாகிவிடுவார்கள். நானும் அந்தக் கூட்டத்தில்தான் இருப்பேன் என்றாலும், என்னை இந்த விஷயத்தில் என் நண்பர்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஏனென்றால் நான் அவளைப் பற்றி ஒரு வார்த்தைகூட ஒருபோதும் பேசுவதில்லை. எனக்கு இதிலெல்லாம் விருப்பம் இல்லை என்பதுபோல் இருப்பேன். ஆனாலும் அந்தக் கூட்டத்தில் இருப்பேன்... மௌனமாய் அவளைப் பார்த்தபடி...

கல்லூரிக்குள் இருக்கும் மளிகைக்கடையில் நான் ஏதாவது வாங்க நிற்கும்போது அவள் வந்தால், நான் ஒதுங்கிக் கொள்வேன். மற்ற நண்பர்களோ பக்கத்திலேயே நின்று வழிந்துகொண்டிருப்பார்கள்.

அவள் ஓர் அழகான சிவப்புச் சைக்கிள் வைத்திருந்தாள். கடைத் தெருவுக்குப் போவதற்காக விடுதிப் பெண்கள் கேட்டால் மட்டும் அதைத் தருவாள். அதற்கு வசதியாக அவள் விளையாடும் போது சாவியை ஊழியன் கையில் கொடுத்து விடுவாள். அவனிடமிருந்து பெண்கள் வாங்கிப் போய், திரும்ப வந்து கொடுப்பார்கள்.

அப்படித்தான் அன்றும் யாரோ ஒருத்தி அவனிடம் சாவி வாங்கிக் கொண்டு எங்கோ போய்த் திரும்பி வருகையில் அவன் இல்லாததால், அந்தப் பெண் சாவியை யாரிடமோ கொடுத்துவிட்டாள். அது அவள் கைக்குப் போய்ச் சேராததால், சாவி தொலைந்துவிட்டதாக எண்ணித் தேடிக் கொண்டிருந்தாள்.
இது தெரிந்து எங்கள் கூட்டம் அந்த மைதானத்தையே சலிக்க ஆரம்பித்துவிட்டது. சாவியைக் கண்டுபிடித்து அவள் இதயத்தில் இடம் பிடித்து விடலாம் என்கிற ஆசையில்... எங்கோ போயிருந்த ஊழியன் திரும்பி வந்து தேட ஆரம்பித்து... சாவியைக் கண்டுபிடித்தான். இந்தக் களேபரங்கள் எல்லாவற்றையும் மைதானத்தின் ஒரு மூலையில் அமர்ந்தபடி நான் மௌனமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் என் மௌனமெல்லாம் தொலையப் போகிறது என்பது தெரியாமல்.
எல்லாம் முடிந்தபிறகு, ஆச்சரியத்தோடு என்னைப் பார்த்தபடி என்னருகில் வந்த பெண்களின் ஊழியன், `டேய் ஒரு விஷயம் தெரியுமா... சாவியைத் தேடும்போது... சங்கர்கிட்ட இருக்கான்னு கேளுன்னு அவள் சொன்னாடா' என்றான்.

அவ்வளவுதான்... என் இதயத்தில் காதல் வெடித்துப் பூத்துவிட்டது. என் பெயர் அவளுக்குத் தெரியுமா? சாவி என்னிடம் இருக்கும் என்று அவள் நினைத்திருக்கிறாள் என்றால், நான் அதை வைத்துக் கொள்ள ஆசைப்பட்டி ருக்கிறேன் என்று அவள் நினைத்திருக்கிறாளா என்று எனக்குள் எண்ணற்ற கேள்விகள் முட்டி மோதும்போது ``டேய் அவளுக்கு உன்னைத் தெரிஞ்சிருக்குடா'' என்றான் அவன். எப்படிடா என்று கேட்கத் துடித்தேன் நான். ஆனால் கேட்காமல் நின்றேன். அதுதான் நான்.

நெஞ்சில் தீப்பற்றிக்கொண்டது. உடலெங்கும் பரவசம் பரவியது. இரவு வந்தது தெரியாமல் அந்த மைதானத்திலேயே அமர்ந்திருந்தேன். கடைசியில் காதல் என்னையும் ஆசிர்வதித்துவிட்டது. ரசனைகள் பூத்தன. கவிதைகள் பிறந்தன.
ஆனால்... கடைசிவரை அவளிடம் என் காதலைச் சொல்லவே இல்லை. இதற்குமுன் காதலைச் சொல்லப்போன என் நண்பர்களிடம் அவள் நடந்து கொண்டதைப் போலவே என்னிடமும் நடந்துகொள்வாளோ என்கிற தயக்கம். அதிலேயே ஓடிவிட்டன மூன்று வருடங்கள். அவளை விட்டுவிட்டு வந்துவிட்டேன்.

ஆனால்... ஆனால்... அவளால் எனக்குள் பதியமிடப்பட்ட காதல் என்னை விடவில்லை. பதினாறு வருடங்கள் ஆனபிறகும். தினம் ஒரு கவிதையை... தினம் ஒரு காட்சியை... கனவாக... கற்பனையாக எனக்குள் பூக்கவைத்துக் கொண்டே இருக்கிறது காதல்.

அன்று என் இதயத்தில் நுழைந்தவளை... இன்று என் இதயமாகவே மாற்றிவிட்டது காதல்.

என்னைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றிலும் அவளைப் பார்க்கக் கற்றுக்கொடுத்து விட்டது காதல். எங்கோ இருப்பவளை எங்கும் இருப்பவளாக ஆக்கித் தந்திருக்கும் காதல்... கடைசியில் என்னையே கொஞ்சம் கொஞ்சமாகக் காதலாகவே மாற்றிக் கொண்டிருக்கிறது.

காதல்தான் என் குணம்.
காதல்தான் என் மதம்.
காதல்தான் என் புகழ்.

ஆம்...
என் எல்லாப் புகழும்
காதலுக்கே!

http://www.thabusankar.blogspot.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக