புதன், 21 டிசம்பர், 2016

மோகன் சினிமா விருதுகள் 2016

மோகன் சினிமா விருதுகள் 2016


ஒவ்வொரு ஆண்டும் எனக்கு பிடித்த சினிமாக்களை மோகன் சினிமா விருதுகள் என்ற பெயரில் குறிப்பிட்டு வருகிறேன். அந்த வரிசையில் இதோ வெற்றிகரமாக 7 ஆம் ஆண்டு சினிமா விருதுகள் .....



சிறந்த படம் – ஆண்டவன் கட்டளை ( மணிகண்டன் ) , விசாரணை (வெற்றிமாறன் ),  ஜோக்கர் ( ராஜு முருகன் )
இயக்குனர் – சுதா கொங்கரா ( இறுதி சுற்று ) , ராஜு முருகன் ( ஜோக்கர் )

கதை – சந்திரகுமார் ( விசாரணை ) சமுத்திரக்கனி ( அப்பா )
திரைக்கதை – அருள்செழியன் , மணிகண்டன் , அனுசரண் ( ஆண்டவன் கட்டளை )
வசனம் – சசி ( பிச்சைக்காரன் ) ராஜூமுருகன் (ஜோக்கர் )

ஒளிப்பதிவு –  மணிகண்டன் ( குற்றமே தண்டனை ) , வெற்றிவேல் மகேந்திரன் ( தொடரி )
படத்தொகுப்பு – கிஷோர் ( விசாரணை )
பின்னணி இசை - இளையராஜா ( தாரை தப்பட்டை )

பாடலாசிரியர் – நா.முத்துக்குமார் (கொஞ்சி பேசிட வேண்டாம், சேதுபதி ) தாமரை (தள்ளிப் போகாதே , அ.எ.மடமையடா )   யுகபாரதி (
என்னங்க சார் உங்க சட்டம் ,ஜோக்கர் )  
பாடகர் - சியான் ரோல்டன் ( அடியே அழகே , ஒருநாள் கூத்து ), சத்யபிரகாஷ் ( ராசாளி , அ.எ. மடமையடா )
பாடகி –  ஷ்ரேயா கோஷல் ( கண்ணை காட்டு போதும் , றெக்க ) , சுப்ரியா ஜோஷி ( நெஞ்சோரத்தில் , பிச்சைக்காரன் )
ஹிட் பாடல் : ஜித்து ஜில்லாடி ( தெறி ) , நெருப்புடா ( கபாலி ), ஆவி பறக்கும் டீக்கடை ( ரஜினி முருகன் )

நடனம் – பிரபு தேவா ("சல் மார்" பாடல் , தேவி )
கலை – ராஜீவன் ( காஷ்மோரா )
கிராபிக்ஸ் - காஷ்மோரா டீம்
ஒப்பனை – நிகார் தவான், ரோஷன் ( காஷ்மோரா )
சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன் ( தெறி ) , திலீப் சுப்பராயன் ( கிடாரி )

நடிகர் – எஸ்ஜே.சூர்யா ( இறைவி ), சமுத்திரக்கனி ( விசாரணை ), விஜய் சேதுபதி ( ஆண்டவன் கட்டளை )
நடிகை – வரலட்சுமி ( தாரை தப்பட்டை ) , ரித்திகா சிங் ( இறுதி சுற்று ) 

அறிமுக நடிகர் - குரு சோமசுந்தரம் ( ஜோக்கர் ) 
அறிமுக நடிகை - நிவேதா பெத்துராஜ் ( ஒருநாள் கூத்து ) 
துணை நடிகர் – தம்பி ராமையா ( அப்பா ), இ.ராம்தாஸ் ( விசாரணை )
துணை நடிகை – பூஜா தேவரியா ( இறைவி ), சரண்யா ( கொடி )

நகைச்சுவை – சூரி , ரோபோ சங்கர் ( வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் )
வில்லன் – வேல ராமமூர்த்தி ( கிடாரி ), பாபி சிம்ஹா ( மெட்ரோ )
குழந்தை நட்சத்திரம் – நைனிகா ( தெறி ), விக்னேஷ் , கேப்ரில்லா ( அப்பா )

சிறந்த தயாரிப்பு – ஜெ.செல்வகுமார் ( ஒரு நாள் கூத்து ) , விஜயகுமார் ( உறியடி)
சிறந்த பொழுதுபோக்கு படம் - ரஜினிமுருகன் ( பொன்ராம் ) , கபாலி ( ரஞ்சித்) 

 சிறந்த படம் , சிறப்பு விருது - இளமி ( ஜுலியன் பிரகாஷ் ) பாரம்பரிய ஜல்லிக்கட்டின் பெருமையை படமாக்கியதற்காக ....
டிவி - பாலிமர் நியூஸ்
டிவி தொகுப்பாளர் - அரவிந்த் சாமி ( நீ.வெ. ஒரு கோடி , விஜய் டிவி )
டிவி நிகழ்ச்சி - ஒரு வார்த்தை ஒரு லட்சம் ( விஜய் டிவி )


நல்லவற்றை குறிப்பிடும் போது மோசமானவை பற்றியும் சொல்லவேண்டும் அல்லவா...

இதோ மோசமான படங்களுக்கான "சுறா" விருதுகள் 


படம் -  முத்தின கத்தரிக்காய் ( வெங்கட் ராகவன் )
கதை - பாக்யராஜ் கண்ணன் ( ரெமோ )
நடிகர் - சுந்தர். சி ( முத்தின கத்திரிக்காய் )
நடிகை - ஏமி ஜாக்சன் (கெத்து )
டிவி - தந்தி டிவி
டிவி நிகழ்ச்சி - நிஜங்கள் ( சன் டிவி )
டிவி தொகுப்பாளர் - ஆதவன் ( காமெடி ஜங்சன், சன் டிவி  )

சூர்யகாயத்ரி

சூர்யகாயத்ரி 

- கேரளாவின் தெய்வீக குழந்தை


இந்த 9 வயது குட்டி தேவதை இன்று கேரளா கொண்டாடும் இசைக் குழந்தை .வ்ட கேரளாவில் வடகரை அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஏழை மிருதங்க வித்வானின் மகள் சூர்யகாயத்ரி . 



பிறவியிலேயே தெய்வீக குரல் அமைய பெற்ற இவரை கோழிக்கோட்டில் இசைப் பயிற்சி அளித்தார் இவரது தந்தை. சில மாதங்களுக்கு முன் புகழ் பெற்ற சென்னை நாரத கான சபாவில் இவர் நடத்திய இசைக்கச்சேரி காண்போரை மயக்கியது.

காயத்ரியின் திறமையை அறிந்த சென்னையை சேர்ந்த இசைக்கலைஞர் குல்தீப் , காயத்ரியுடன் இணைந்து பக்தி கானங்களை வழங்கிவருகிறார். யூடியூபில் வெளியிடப்படும் காயத்ரியின் ஒவ்வொரு வீடியோவும் லட்சக்கணக்கில் லைக் வாங்குகிறது.

ஜேசுதாசின் குரலிலேயே கேட்டுப் பழகிய ஹரிவராசனம் பாடலை இவரின் குரலில் கேட்டால் மெய் மயங்கும். MS.அம்மாவின் பாடல்களும் ... காயத்ரியின் பாடல்களை யூ டியூபில் காணலாம். அல்லது குல்தீப்பின் பேஸ்புக் பக்கத்தில் [ https://www.facebook.com/kuldeepmpai/videos ] காணலாம்.

சாம்பிள் வீடியோ ...
https://www.youtube.com/watch?v=ezKWPd9rH0M

திங்கள், 3 அக்டோபர், 2016

மருத்துவக் கடவுள்

மருத்துவக் கடவுள்


கிமு 35 ஆம் ஆண்டு.... 


( இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் )

கிரேக்க பேரரசர் ஜூலியஸ் சீசர் மரணப் படுக்கையில் இருக்க ,அவரின் உடல்நலம் பற்றி வெளியே தெரிந்தால் , அண்டை நாட்டு மன்னன் கிரேக்கத்தை கைப்பற்ற முதலக் கூடும் என்பதால் ரகசியமாக அரண்மனையில் வைத்தியம் நடக்கிறது. அரசர் நலம் பெற்று விரைவில் மக்கள் முன் தரிசனம் தருவார் என அறிவிக்கிறார் பேரரசி கிளியோபாட்ரா .

இருந்தாலும் மக்கள் மத்தியில் கவலை . மருத்துவக் கடவுளை நோக்கி ஓடுகிறார்கள். ஒலிம்பஸ் குன்றின் அடிவாரத்தில் மக்கள் குவிகிறார்கள் . இருந்தாலும் குன்றின் மேல் ஏற மக்களுக்கு அனுமதியில்லை. கீழே இருந்தவாறே சூரியனை தொழுகிறார்கள்.. ஏனென்றால் சூரியனுக்கான கிரேக்க கடவுள் தான் மருத்துவத்திற்கும் கடவுள் ..


மந்திரி பிரதானிகளுடன் தலைமை மருத்துவ குரு குன்றின் மேலே, மருத்துவ கடவுளை நோக்கி பூஜை செய்தார். திடீரென அவர் கண்களில் பிரகாசம் ... மந்திரிகள் ஏன் என்று கேட்க ... மருத்துவ கடவுள் தன் கண் முன் தோன்றியதாகவும் மன்னர் குணமாவார் என கூறியதாகவும் சொன்னார்.

எங்கள் கண்களுக்கு தெரியவில்லையே என மந்திரிகள் கேட்க , யாருடைய மனைவி பத்தினியோ அவர்கள் கண்ணுக்கு மட்டுமே தெரிவார் என கூறிவிட்டு குரு புறப்பட்டார். நம் கண்களுக்கு தெரியவில்லை என கூறினால் நம் மனைவி பத்தினி இல்லை என ஆகிவிடும் .எனவே நேரம் ஆக ஆக எல்லா மந்திரிகளும் கடவுளை பார்த்துவிட்டதாக கூறி கீழே வந்தனர். மக்களிடம் மருத்துவக் கடவுளை கண்டதாகவும் ,மன்னர் குணமாகிவிடுவார் என கூறியதாகவும் தெரிவித்தனர்.

www.facebook.com/mohan.salem1

இருந்தாலும் மக்களிடம் குழப்பம் நீடிக்கவே , தலைமை தளபதி வந்து மலையில் ஏறி , அவரும் கடவுளை பார்த்ததாக கூறினார். இது தான் சாக்கு என மன்னனால் ஓரம்கட்டப்பட்டு இருந்த குறுநில மன்னன் தாலாமாவல்ஸ் ஒலிம்பஸ் மலைக்கு வந்தார். மலையின் இரண்டாம் சுற்று வரை சென்றதாகவும் , கடவுளை பார்த்தவர்கள் மன்னர் குணமாகி விடுவார் என கூறியதாகவும் சொன்னார்.

மன்னர் குணமானாரா இல்லையா .. ( விரைவில் ...)

சொல்ல மறந்துவிட்டேனே ... கிரேக்க புராணங்களின் படி .. மருத்துவ கடவுளின் பெயர் என்ன தெரியுமா... ?

"அப்போலோ" 


- மோகன் , சேலம்

திங்கள், 12 செப்டம்பர், 2016

30 நாள் 30 மருத்துவம் - நாள் 8

30 நாள் 30 மருத்துவம் - நாள் 8


சர்க்கரை

 
நேரடியாகவும் மறைமுகமாகவும் நாம் சாப்பிடும் வெள்ளை கலரிலான சர்க்கரையின் அளவு எவ்வளவு தெரியுமா ..
( மறைமுக சர்க்கரை என்பது அரிசி , கோதுமை , மைதா ,மக்காசோளம் , கிழங்கு வகைகள் போன்றவற்றில் உள்ள கார்போ ஹைட்ரேட் மூலம் உடலுக்கு கிடைக்கும் சர்க்கரை )


1750: வருடத்திற்கு இரண்டு கிலோ ஒரு நபருக்கு
1850: வருடத்திற்கு பத்து கிலோ ஒரு நபருக்கு
1994: வருடத்திற்கு 60 கிலோ ஒரு நபருக்கு
1996: வருடத்திற்கு 80 கிலோ ஒரு நபருக்கு
2016 ... இன்னும் அதிகமாக இருக்கலாம்...

வாழ்நாளில் நாம் சாப்பிடும் சர்க்கரையின் அளவு - 2 டன்....!.

அப்புறம் ஏன்யா நமக்கு இதெல்லாம் வராது..!

1. சர்க்கரை வியாதி
2. பிரஷர்
3. இதயவியாதி
4. உடற்பருமன்
5. அதிக கொலஸ்டிரால்
6. fatty liver

வெள்ளை சர்க்கரை சேர்த்த உணவுகள் , கார்போ ஹைட்ரேட் எனப்படும் மாவு சத்து உள்ள உணவுகளை தவிர்த்தால் , பெருமளவிலான வியாதிகளை தவிர்க்க முடியும்.

நன்றி ,

Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore

சனி, 20 ஆகஸ்ட், 2016

ஆதி பகவன் யார்

ஆதி பகவன் யார் ? எது ?

-ஆ.ஜனார்த்தனம்

திருக்குறளுக்கு இணையான நூல் உலகில் எதுவும் இல்லை . சாதி , மதம் , இனம் , மொழி , நாடு கடந்து உலக மக்கள் அனைவரின் வாழ்க்கைக்கும் வழிகாட்டியாக உள்ள நூல் ; வாழ்வியல் நூல்.
 குறள் ஒன்றேமுக்கால் அடியில் ஏழு சீர்களில் அமைந்துள்ளது . ஒவ்வொரு சீரும் ஒரு கடல் .

"அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி
 குறுகத் தரித்த குறள் "

என்ற ஒளவையாரின் கூற்று மிகைப்படுத்தப்பட்டது அல்ல. நூற்றுக்கு நூறு உண்மை. குறளின் உண்மையான பொருளைக் கண்டறிய முற்படுவது என்பது ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பதைப் போன்றது.

இவ்வாறு இருக்க , ஒன்றே முக்கால் அடியில் உள்ள குறளுக்கு அதைவிடச் சுருக்கமாக ஓரிரு வரிகளில் உரை எழுதுவதும் ,புரியாத இடங்களில் மழுப்பிவிட்டு செல்வதும் வேதனைக்குரியது .ஓர் உரையைப் புரிந்துகொள்ள மற்றோர் உரை தேவை என்ற நிலை இருக்கக் கூடாது .

ஒவ்வொரு சொல்லுக்கும் தெளிவான பொருள் வேண்டும். குறளின் உண்மையான பொருளைக் கண்டறிய வேண்டும். இதற்கும் வள்ளுவரே வழிகாட்டுகிறார். " மெய்ப்பொருள் காண்பது அறிவு " என்கிறார் . அதற்கு நுட்பமான ஆய்வும் , பின் தெளிவான விளக்கமும் தேவை .

முதல் குறளை எடுத்துக் கொள்வோம்.

" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி

    பகவன் முதற்றே உலகு "


[ அதிகாரம் 1; கடவுள் வாழ்த்து; குறள் - 1 ]

அருஞ் சொற்பொருள்


அகர - அகரம் ; 'அ' என்ற எழுத்து ; மொழியின் முதல் எழுத்து .
முதல - முதல் ; முதல் எழுத்தாக உள்ளது
எழுத்தெல்லாம் - எழுத்துக்கள் எல்லாம் ; எல்லா எழுத்துக்களும்
ஆதி - முதல்
பகவன் - கடவுள்
ஆதிபகவன் - முதற்கடவுள்

இதில் ஆதிபகவன் , உலகு ஆகிய சொற்கள் ஆய்வுக்குரியவை. மொழியின் முதல் எழுத்தை இறைவனுக்கு எடுத்துக்காட்டாக வள்ளுவர் குறிப்பிடுவதும் ஆய்வுக்குரியது .

 ஆதிபகவன்


ஆதிமனிதன் , விலங்குகளைப் போல் காடுகளில் அலைந்து திரிந்தான். உணவுக்காகவும், தன்னைவிடக் கொடிய விலங்குகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் போராடினான் . குகைகளிலும் மரப்பொந்துகளிலும் வாழ்ந்தான் . நிர்வாணமாகத் திரிந்தான் .

அவன் அறிவு வளர்ச்சி அடையத் தொடங்கிய பொழுது நிர்வாணமாக இருக்க நாணமடைந்தான். இலை தழைகளையும் , மரவுரிகளையும் ஆடைகளாக அணிந்து கொண்டான் .

அவன் அறிவு மேலும் வளர்ச்சி அடைந்தபொழுது இயற்கை நிகழ்வுகளைப் பற்றி சிந்தித்தான். இடி, மின்னல் , மழை , வெள்ளம் , புயல் , நிலநடுக்கம் ஆகியவை அவனை அசச்சுறுத்திக் கொண்டிருந்தன. ஞாயிறு , திங்கள் , விண்மீன்கள் , இரவுபகல் மாறி மாறி வருவது ஆகியவை அவனுக்கு வியப்பூட்டின .இவற்றையெல்லாம் இயக்கக கூடிய ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்று நினைத்தான் .அந்த உணர்வு மற்றும் சிந்தனையின் விளைவாக உருவான கடவுளையே முதற்கடவுள் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

அதற்குப் பின்னர் காலப்போக்கில் பல்வேறு கடவுளர்கள் தோற்றுவிக்கப்பட்டனர் . அவர்களுக்குள் உயர்வு தாழ்வுகளும் கற்பிக்கப்பட்டன. உருவ வழிபாடு ஏற்பட்டது . உயிர்ப் பலிகளும் இடப்பட்டன.இவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு ஆதிமனிதன் உணர்ந்த அந்த முதற்கடவுளையே ஆதிபகவன் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

கடவுள் நம்பிக்கையை வள்ளுவர் வலியுறுத்துகிறார் .வாழ்வில் துன்புற்று , எல்லா நம்பிக்கைகளையும் இழந்து நிற்கும் ஒருவனுக்கு கடைசிப் புகலிடமாக இருப்பது கடவுள் நம்பிக்கை மட்டுமே. அந்த நம்பிக்கையே அவனை வாழ வைக்கிறது .எனவேதான் வள்ளுவர் இறைவனை உலகமக்கள் அனைவருக்கும் முதல்வன் , தலைவன் என்று கூறுகிறார்.

உலகு


'உலகு' என்ற சொல் மக்களை மட்டுமே குறிக்கும் . கல்லையும் , மண்ணையும் , மரம் செடி கொடிகளையும் , விலங்குகளையும் குறிக்காது .மரம் , செடி , கொடிகளுக்கும் , விலங்குகளுக்கும் கடவுளைப்பற்றிய உணர்வோ , சிந்தனையோ கிடையாது . மேலும் திருக்குறள் மக்களின் வாழ்வியல் நூல் என்பதால் 'உலகு' என்ற சொல் மக்களை மட்டுமே குறிக்கும் என்பது புலனாகிறது .

இறைவனுக்கு எடுத்துக்காட்டு

மொழியின் முதல் எழுத்தை இறைவனுக்கு எடுத்துக்காட்டாக வள்ளுவர் குறிப்பிடுவது சிந்தனைக்குரியது . மொழிதானே மனிதனின் அடையாளம் . மொழி இல்லையேல் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

இவற்றையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு , வள்ளுவர் படைத்தளித்த முதல் குறளின் பொருளை சுருக்கமாகப் பின்வருமாறு கூறலாம்.

" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
  பகவன் முதற்றே உலகு "

" எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்ற எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டுள்ளன . அதுபோல இவ்வுலகில் வாழும் மக்கள் இறைவனைத் தங்கள் முதல்வனாகவும் , தலைவனாகவும் கொண்டுள்ளனர் . " 

 -ஆ.ஜனார்த்தனம் , ஆசிரியர் ( ஓய்வு )
சேலம் .
    

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

வெயிலோடு விளையாடு

30 நாள் 30 மருத்துவம் - நாள் 7


வெயிலோடு விளையாடு 


இந்தியா வெயில் நாடு என்கிறோம். ஆனால் எங்கள் ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவில் ஆயிரக்கணக்கான மெடிக்கல் ரிபோர்ட்டுகள் வந்ததில் ஒரே ஒரு ரிபோர்ட் தவிர்த்து வேறு எதிலும் வைட்டமின் டி அளவுகள் 30 தாண்டவில்லை.

வைட்டமின் டி அளவுகள் அதிகரிக்க, அதிகரிக்க வியாதிகள் வரும் விகிதம் எந்த அளவு குறைகிறது என்பதை கீழே உள்ள படம் விளக்குகிறது.

உதாரணமாக வைட்டமின் டி அளவு 20 ஆக இருக்கையில் 75% மாரடைப்பு ரிஸ்க் உள்ளது. வைட்டமின் டி அளவு 40 தொட்டால் இது 50% எனும் அளவு வீழ்ச்சி அடைகிறது.

ரத்த அழுத்தம், ஒஸ்டிரியோபோசிஸ், எலும்பு முறிவு என வைட்டமின் டி அளவுகள் கூட, கூட வியாதிகளின் சதவிகிதம் மட, மட என சரிகிறது. குறிப்பாக கான்சருக்கும் வைட்டமின் டிக்கும் இடையே உள்ள தொடர்பை காண்க. வைட்டமின் டி குறைய, குறைய கான்சர் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. டி அளவுகள் 60 என்பதை தான்டுகையில் அதுவே கான்சர் ரிஸ்க்கை பெருமளவு குறைத்துவிடுகிறது.

இத்தனை நன்மையும் கிடைக்க சும்மா வெயிலில் நின்றால் போதும் என்றால் நம்ப முடிகிறதா?

காலை 11 மணியில் இருந்து 1 மணிக்குள் சுமார் 20 நிமிடங்கள் வெயிலில் இருந்தால் போதும். ஓரளவிற்கு உடலில் வெயில் படும் அளவிற்கு நிற்கவேண்டும். தலையில் தொப்பி போட்டுக் கொள்ளலாம். மாத்திரை வடிவிலும் வைட்டமின் D கிடைக்கிறது. ஆனால் இயற்கையாக சூரிய ஒளியில் பெறப்படும் அளவிற்கு செயற்கை வைட்டமின் பலனளிக்காது.

தகவல் நன்றி , நியாண்டர் செல்வன் .

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

என்ன செய்யும் ஈ

என்ன செய்யும் ஈ


அன்று பாலக்காடு வரைப் போக வேண்டி இருந்தது . காரில் லக்கேஜுகளையும் , குடும்பத்தையும் நிரப்பி காரைக் கிளப்ப நினைக்கையில் காரின் உள்ளே ஒரு ஈ எப்படியோ புகுந்து விட்டிருந்தது.

கண்ணாடியை இறக்கி வாயால் ஊதியும் , கையை வீசிப் பார்த்தும் வேலைக்கு ஆகவில்லை . வெளியே போக வில்லை . நேரம் ஆனதால் வண்டியை கிளப்பினேன். அப்பப்ப கண்ணாடி முன்னும் முகத்துக்கு முன்னும் ஈ வந்து வட்டம் போடும் போதெல்லாம் நான் நைஸாக கிளாஸை இறக்குவதும் , அது நைசாக உள்ளே சென்றுவிடுவதும் தொடர்ந்தது.

இளையராஜா 4 ஸ்பீக்கரிலும் இசையை வழியவிட்டு கொண்டு இருந்தாராகையால் சிறிது நேரத்தில் நான் ஈயை மறந்துவிட்டேன். வழியில் டீ குடிக்க நிறுத்திய போதும் அதைக் காணவில்லை.

பாலக்காட்டுக்குப் போய் எல்லோரும் இறங்கி , எல்லா லக்கேஜையும் இறக்கிவிட்டு மரத்தடியில் ஓரமாக காரை நிறுத்தி இறங்க முற்படும்போது 'ங்கோய்ங் ..' என முன்னால் வந்து பறந்தது .நீ இன்னுமா உள்ளே இருக்கிறாய் என கேட்டுவிட்டு சிறிது நேரம் கதவைத் திறந்து வைத்தேன் . ஒருவழியாக வெளியே பறந்தது.

மதிய உணவை முடித்துவிட்டு பலா மரத்தடியில் சேரைப் போட்டு அமர்ந்திருந்த வேளையில் அந்த ஈயின் நினைப்பு வந்தது. நான் பாட்டுக்கு அதை சேலத்தில் இருந்து பாலக்காட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டேன்.

இப்போ அந்த ஈ என்ன செய்யும்...!?

சேலத்தில் அதன் சொந்தகார ஈக்கள் தேடுமா ... இங்குள்ள ஈக்கள் அதை சேர்த்துக்கொள்ளுமா .. தமிழ்நாட்டு ஈக்கு கேரளா ஈ பாஷை புரியுமா...

இங்கே அதுக்கு ஜோடி கிடைக்குமா...
அது ஆண் ஈயா இல்லை பெண் ஈயா என வேறுத் தெரியவில்லை ....
எப்படியும் நம்ம ஊர் ஈயை விட கேரளா ஈ கொஞ்சம் சுத்தமாக வேறு இருக்கும்....
அவை சேர்த்துக் கொள்ளுமா ....
பிரெண்ட்ஸ் கெடைப்பாங்களா ...

அடடடா.. ஒரு ஈயோட வாழ்க்கைல விளையாண்டுட்டோமே ...!

என்ன செய்யும் ஈ ...!

- மோகன் , சேலம் .

செவ்வாய், 12 ஜூலை, 2016

வில்வம்‬

30 நாள் 30 மருத்துவம் - நாள் 6


‪‎வில்வம்‬

 
அந்தக்காலத்தில் பாமர மக்களுக்கு நோய்க்கான மருந்துகள் பற்றி சொன்னால் , சரியாக புரிந்துகொள்ள மாட்டார்கள் என்பதற்காக நோய்க்கான மருந்துகளை கோவில்களில் வைத்தார்கள். மேலும் இறைவன் மீது நம்பிக்கை வைத்து கடைபிடிக்கும் போது , நோய் விரைவில் குணமாகும்.

துளசி , வேப்பிலை , மஞ்சள் ,குங்குமம் ,சந்தனம் ,திருநீறு , காவடி எடுத்தல் , மஞ்சள் நீராட்டு , அங்க பிரதட்சணம் ,அலகு குத்துதல் ,மரத்தை வலம் வருதல் , கோவிலை வலம் வருதல் ...எல்லாமே மருத்துவ பலன்களுக்காக ஆலயத்தில் வைக்கப்பட்டவை .

இந்த வரிசையில் மிக முக்கியமானது வில்வம் . அனைத்து சிவன் கோவில்களிலும் வில்வ மரம் இருக்கும், வில்வ தீர்த்தம் வழங்கப்படுகிறது. வில்வ இலையில் தயாரிக்கப்படும் வில்வ தீர்த்தம் உடல் சூட்டை தணிக்கும் , வயிற்றுப்புண் ,ஆண்மைக்குறைவு , நீரிழிவை போக்கும் . வயிற்றுவலி , அஜீரணம் போன்றவற்றை போக்கும். எனவே வில்வத்தை சர்வலோக நிவாரணியாக பார்த்தனர்.

அந்த நாட்களில் குழந்தை இல்லாத தம்பதிகளை ஒரு மண்டலம் ( 48 நாட்கள் ) சிவன் கோவில் சென்று வழிபட சொல்வார்கள் . தினமும் அந்த தீர்த்தத்தை பருகிவிட்டு, ஆலயத்தில் உள்ள வில்வ மரத்தை வலம் வந்து அந்த காற்றை சுவாசிக்கும் போது பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன .

குரானிலும் நபிகள் வில்வத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். இதயத்தை வலுவூட்டுவதாக நபி மருத்துவம் கூறுகிறது. வில்வ பழம் வயிற்று புண் , ஆசன வாய் புண், மூலம் போன்றவற்றை ஆற்றக்கூடியது. வில்வஇலை மலச்சிக்கலை போக்கும்.

வில்வத்தின் , வேர் , பிசின் எல்லாமே மருத்துவ குணம் உள்ளவை.
வில்வ பழ ஜூஸ் , ஜாம் போன்றவை இயற்கை அங்காடிகளில் கிடைக்கிறது.

குறிப்பு : 50 ஆண்டுகளுக்கு மேலான மரத்தில் இருந்து கிடைக்கும் பலன்களே சிறந்த பலனை தரும்.

சின்ன வெங்காய சருகு

30 நாள் 30 மருத்துவம் - நாள் 2


சின்ன வெங்காய சருகு


மூலம் , ஆசனவாய் வெடிப்பு போன்றவற்றிற்கு அருமருந்தாக செயல் படுகிறது சின்ன வெங்காயத்தின் சருகு( மேல் தோல் ) . மேலும் நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும் வரும் முன் காக்கும் மருந்தாக செயல்படுகிறது. சின்ன வெங்காய சருகைக் கொண்டு தலையணை செய்து அதில் அமர்ந்து வந்தால் , மூலம் , ஆசனவாய் வெடிப்பு மூலம் ஏற்படும் வலி குறையும் . தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் ஆரம்பநிலை குறைபாடுகள் நீங்கும்.

வெங்காயம் விற்பவர்கள் சின்னவெங்காயத்தை புடைத்து சுத்தம் செய்துவிட்டு சருகை குப்பையில் போடுவார்கள் . அந்த சருகை வாங்கிவந்து , அதிலுள்ள வேர் ,நார் , குப்பைகள், நீக்கிவிட்டு சுத்தமான சருகை மட்டும் எடுத்துக்கொள்ளவும். காடா துணி அல்லது காட்டன் துணி கொண்டு உங்கள் இருக்கையில் வைக்கும் அளவுக்கு சருகை வைத்துத் தைத்து தலையணை செய்து கொள்ளவும்.


பாதிப்பு உள்ளவர்கள் மட்டுமல்ல , நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களும் இதை பயன் படுத்தினால் மூலம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். முடிந்தவரை குஷன் இருக்கை இல்லாமல் ஒயரில் நெட் போட்ட இருக்கைமீது இதை வைத்து அமர்வது சிறந்தது.

குறிப்பு 1 - குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை சருகை மாற்றவும்.

குறிப்பு 2 - நாட்டு வெங்காய சருகாக இருந்தால் சிறப்பு.


குறிப்பு 3 - இந்த தகவலை என்னிடம் சொன்னது , MBBS , MD படித்த ஆங்கில மருத்துவர்.

குமட்டிக் காய்

30 நாள் 30 மருத்துவம் - நாள் 1


குமட்டிக் காய் 


தலையில் புழுவெட்டு உள்ளவர்கள் , பல மருந்து தேய்த்தும் எந்தவித பலனும் இல்லாதவர்கள் இதை செய்யுங்கள். கண்டிப்பாக பலன்கிடைக்கும். கிராமங்களிலும் , ரயில்வே ஓரங்கள், சாலை ஓரங்களில் வளர்ந்து கிடைக்கும் இந்த காய் எலுமிச்சை அளவில் தர்பூசணி பழத்தைப் போல் இருக்கும்.
பூச்சி வெட்டு பாதிக்கப்பட்ட இடங்களில் அந்த குமட்டி காய்க்குள் இருக்கும் உள் நீரை இரண்டு மூன்று நாட்களுக்கு தொடர்ந்து தொட்டு வைத்தால் , புழுவெட்டு மறைந்து முடி வளரும்.


முடி உதிர்தல், பொடுகு, தலையில் அரிப்பு, புழுவெட்டு உள்ளிட்ட தலை முடி பிரச்னைக்கு, வழுக்கு குமிட்டி காய் பூரண குணமளிக்கும். இதன் விதையை, அருகம்புல்லுடன் சேர்த்து அரைத்து, அம்மை நோயால் ஏற்படும் கொப்புளங்களில் வைத்தால், விரைவில் கொப்புளங்கள் குணமாகும். வழுக்கு குமட்டி காயின் இலையை அரைத்து வீக்கம், வலி உள்ள இடங்களில் வைத்து, மசாஜ் செய்தால், தீராத வலியும் குணமாகும்.

குறிப்பு :
இது விஷத்தன்மை கொண்டது குழந்தைகள் கையில் கொடுக்க வேண்டாம்.காயை பயன்படுத்திய பிறகு கையை நன்கு கழுவி விடுங்கள்.

வியாழன், 30 ஜூன், 2016

பாகற்காய் இலை‬

30 நாள் 30 மருத்துவம்  - நாள் 5

 

பாகற்காய் இலை‬

 
நான் சிறுவனாக இருக்கும் போது எங்கள் வீட்டில் பாகற்காய் செடி இருக்கும். உண்மையில் அது கொடி . பந்தல் போட்டு படர விட்டிருப்பார் அப்பா. நிறைய காய் காய்க்கும்.

1.பாகற்காய் இலை வயிற்றுப பூச்சிகளை நீக்கும் அற்புதமான மருந்து. வயிற்றில் பூச்சி இருந்தால் கொழுந்து இலைகளாகப் பறித்து , அம்மியில் அரைத்து , கோலிகுண்டு அளவில் சிறு உருண்டைகளாக உருட்டி எங்களுக்கு ( எனக்கும், தங்கைகளுக்கும் ) தருவார் அப்பா . கசக்கும் என்பதால் நாங்கள் சாப்பிட மாட்டோம். அதற்கு ஒரு வழி வைத்திருந்தார்.

ஒரு கையில் கொஞ்சம் சர்க்கரை . இன்னொரு கையில் நாலணா ( 25 பைசா ) காசும் தருவார். பாகற்காய் இலை உருண்டையை வாயில் போட்டு முழுங்கிவிட்டு சர்க்கரையை போட்டுக்கொள்வோம். பிறகு ஒரே ஓட்டம் . பெட்டிக்கடையில் நாலணாவிற்கு கல்கோனா, எலந்தவடை என வாங்கி கொண்டாடுவோம்.

3 மாதத்திற்கு ஒருமுறை இந்த வைத்தியம் தொடரும். இன்றிய நவீன மருந்துகளை விட பல மடங்கு சிறந்தது பாகற்காய் இலை.

2. தாய்ப்பால் குறைவாக சுரக்கும் தாய்மார்கள் , பாகற்காய் இலையை அரைத்து தொடர்ந்து பற்று போட்டுவந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் .( பால் கொடுக்கும் போது கசப்பு சுவை போக நன்கு கழுவிவிடவும் )

3.நீரில் பாகற்காய் இலையை இட்டு 3 நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும். கொதித்ததும் அத்துடன் 1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள் கலந்து வடிக்கட்டி சுவைக்கு தேன் சேர்த்து பருகவும். இந்த டீ இரத்த அழுத்தத்தை சீராக்கும். இரத்தத்தில் இருக்கும் அதிக கொழுப்பை குறைக்கும்.

4.பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்துவிடும்.

5.பாகற்காய் இலை வறுவல்

__________________
தேவையானவை

பாகற்காய் இலை -1கப்
சின்ன வெங்காயம் -10
காய்ந்தமிளகாய் -2
கறிவேப்பிலை -சிறிது
உப்பு -தேவையான அளவு
தேங்காய் துறுவல் -1/4கப்
எண்ணை -1ஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு -1/2ஸ்பூன்

செய்முறை

A.இலையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
B.வெங்காயம்,மிளகாய் நறுக்கிவைக்கவும்.
C.வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
D.பாகற்காய் இலை போட்டு நன்கு வதக்கி அடுப்பை சிம்மில் வைத்து வேகவிடவும்.
E.வெந்ததும் உப்பு போட்டு தேங்காய்துறுவல் போட்டு வதக்கி இறக்கவும்.
F.சிறிது கசப்புடன் இருக்கும். மாதம் ஒருமுறை சாப்பிட்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் போகும்.

வெள்ளி, 24 ஜூன், 2016

சிகப்பு கொய்யா‬

30 நாள் 30 மருத்துவம் - நாள் 4


சிகப்பு கொய்யா‬

 
சமீபத்தில் நடந்த உலகில் சிறந்த பழம் எது என்ற ஆய்வில் நம் தமிழகத்தில் விளையும் சிகப்பு கொய்யா முதல் இடம் பிடித்துள்ளது . உணவியல் நிபுணர்களும் இதை உறுதி செய்துள்ளனர். இன்று ஹைபிரீடு வெள்ளைக் கொய்யா அதிகம் உள்ளது . ஆனால் நாட்டு ரக சிகப்பு கொய்யா மிகச்சிறந்த பழம் ஆகும்.

1.வேறு எந்தப் பழத்திலும் இல்லாத அளவுக்கு வைட்டமின் C கொய்யாவில் உள்ளது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.

2. கொய்யாவின் தோலில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. எனவே தோலோடு சாப்பிட வேண்டும்.

3.சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் மதிய உணவுக்குப் பின் கொய்யா பழம் (அதிகம் பழுக்காத) உண்ணலாம். கொய்யா பழத்திற்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை உண்டு . சர்க்கரையால் உண்டாகும் கிறுகிறுப்பை மாற்றும். மலச்சிக்கலைப் போக்கும்.
வயிற்றுப்புண்ணை ஆற்றும். அதிக நார்ச்சத்துள்ளதால் செரிமான சக்தியை அதிகரிக்கிறது.

4. தொடர்ந்து கொய்யா சாப்பிட்டு வந்தால் மதுப்பழக்கம் குறையும்.

5. கொய்யாவில் உள்ள ரெட்டினால் பார்வை திறனை அதிகரிக்கும். இதில் உள்ள போலேட் என்ற தாது உப்பு இனப்பெருக்க உறுப்புகளை மேம்படுத்தும்.

6.சிவப்பு கொய்யாவில் லைகோபீன் சத்துக்கள் உள்ளதால், அலர்ஜி, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மிகவும் நல்லது. மூப்படைவதைத் தாமதப்படுத்தி, சருமச் சுருக்கங்கள் ஏற்படாமல் காக்கும்.

7. சிகப்பு அரிசி அவல் அல்லது சிகப்பரிசி சாதத்துடன் சிகப்பு கொய்யா சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .

8.கோடையில் வரும் சளி, இருமல், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற உடல் பிரச்னைகள் தடுக்க சிகப்பு கொய்யா சிறந்தது.

9.ஈறுகளில் ரத்தக்கசிவை தடுக்கும்.

10. 100 கிராம் கொய்யாவில் உள்ள சத்துக்கள்
_______________________________________
ஈரப்பதம் - 77 - 86 கிராம்
நார்ச்சத்து -2.8 - 5.5 கிராம்
புரதம் - 0.9 - 1 கிராம்
கொழுப்பு -0.1 - 0.5 கிராம்
சாம்பல் சத்து 0.43 - 0.7 கிராம்
கார்போஹைட்ரேட் - 10 கிராம்
கால்சியம் - 9.1- 17 மி.கிராம்
பாஸ்பரஸ் - 17.8 - 30 மி.கிராம்
இரும்புசத்து - 0.30 - 0.70 மி.கிராம்
கரோட்டீன் - 200 - 400 ஐ.யு.
தையமின் - 0.046 மி.கிராம்
ரிபோப்ளேவின் - 0.03 - 0.04 மி.கிராம்
நியாசின் - 0.6 - 1.068 மி.கிராம்
விட்டமின் - பி3 40 ஐ.யு
விட்டமின் - பி4 35 ஐ.யு

மேலும் இதில் டெர்பினாய்டுகளும் கேலிக் அமிலமும் உள்ளன.

திங்கள், 20 ஜூன், 2016

ருவாண்டா


ருவாண்டா 


மத்திய ஆப்ரிக்க நாடான ருவாண்டாவிற்கு இன்று நம்ம பையன் ஒருத்தன் பணி நிமித்தமாக செல்கிறான். அந்த நாட்டைப் பத்தி தெரிஞ்சுக்குவோமே என தேடியதில் கிடைத்த தகவல்களை பகிர்கிறேன்.

1. ஆப்பிரிக்க கண்டத்தின் மைய பகுதியில் உகாண்டா , தான்சானியா நாடுகளுக்கு அருகே அமைந்துள்ளது ருவாண்டா. தலைநகர் கிகாலி . கிகாலி நம்ம ஊர் போலவே இருக்கிறது. மொத்த நாடுமே மலைப்பகுதியில் உள்ளது.மொழி கின்யருவாண்டா , மக்கள் தொகை 1.2 கோடி .

2. பெல்ஜியத்திடம் இருந்து 1962 ஆம் ஆடு விடுதலை ஆனது. 1994 இல் நடந்த உள்நாட்டு இனக்கலவரத்தில் சுமார் 8 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகாக சீர்திருத்தத்தில் வறுமையில் இருந்து கொஞ்சம் மீண்டாலும் ,இன்னும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. இந்தியாவில் இருந்து பணிக்கு செல்பவர்கள் பாதுகாவலுருடன் தான் வெளியே செல்ல வேண்டும்.

3. நாடாளுமன்ற அமைப்பைக் கொண்ட மக்களாட்சி அரசு. உலகிலேயே அதிக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட நாடு . மொத்தம் 80 MP களில் 45 பேர் பெண்கள்.

4. உலகில் உள்ள 221 நாடுகளில் மனிதனின் சராசரி ஆயுள் குறைவாக உள்ளது ருவாண்டாவில் தான். (பெண்களுக்கு 59.52 ,ஆண்களுக்கு 56.57 வருடங்கள்).

4. விவசாயத்தில் 80 சதவீதம் நைல் நதியை சார்ந்துள்ளது. சோளமாவில் தயாரிக்கப்படும் உகாலி (Ugali ) , வேகவைத்த வாழையில் இருந்து தயாரிக்கப்படும் மடோக் ( Matoke ) , மரவள்ளி இலையில் இருந்து இசோம்பே( Isombe , கருவாட்டுடன் சாப்பிடுவர் ) என்பது முக்கிய உணவுகள் .


5. தலைநகர் கிகாலியில் இந்திய , சைனீஸ் , இத்தாலி உணவுகள் கிடைக்கும் . சில பகுதிகளில் முதலைக் கறியும் கிடைக்கும்.!

6. உலகில் மலை கொரில்லாக்கள் பெரும்பான்மையானவை இங்குதான் உள்ளது. நாட்டிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளில் 70 சதவீதம் அதைக் காணவே வருகிறார்கள்.


7. இந்தியாவில் இருந்து ருவாண்டாவிற்கு நேரடி விமானங்கள் இல்லை. துபாய் ,கத்தார் , கென்யா வழியாக கிகாலி செல்ல வேண்டும்.
8. ருவாண்டாவின் பணம் ருவாண்டன் பிராங் . நம் ஒரு ரூபாய்க்கு 11.62 ரு.பிராங் .

9. ருவாண்டாவில் கல்லூரிகள் அதிகம் இல்லை. நிறைய ருவாண்டா மாணவர்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சேலம் , வேலூர் , சிதம்பரம் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் படிக்கிறார்கள்.

10. இந்தியாவில் ருவாண்டா தூதரகம் புது டெல்லியில் உள்ளது.

புதிய நாடு .. புதிய மனிதர்கள் ... புதிய சூழ்நிலை .. புதிய அனுபவம் .

ஞாயிறு, 8 மே, 2016

இலவசம்

 இலவசம்


ஜீன்ஸ் படத்தில் வரும் "பூவுக்குள் ஒளிந்திருக்கும் " ஸ்டைலில் பாடவும்


பூவையர் ஓட்டிச் செல்ல
ஸ்கூட்டி தான் இலவசம்
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி
வாங்கலியோ இலவசம் 


நாளெல்லாம் பேச இனி
செல்போனும் இலவசம்
தெரு மீட்டிங் போனா
பீர் பாட்டில் இலவசம்
இலவசமே அசந்து போகும்
எல்லாமே இலவசம் ..

கல்தோன்றி மண்தோன்றிக்
கடல்தோன்றும் முன்னாலே
உண்டான நோய் இந்த இலவசம்

பதினெட்டு வயதான
பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற ஆசை இலவசம்

ஒரு பயனுமில்லா மிக்சி பேன்
ஒரு ரூபாய் இட்லியாம்.
இட்லியும் அதிசயமே

விலையில்லா பொருட்களிலே
உருப்படியாய் ஒன்றுமில்லை
அவமானம் இலவசமே ..

மின்சாரம் இல்லாமல்
மின்திட்டமும் இல்லாமல்
நூறு யூனிட் மின்சாரம் இலவசமாம் ..

ஓட்டு வாங்க என்னெல்லாம்
கொடுக்கலாம் என்பதும்
ஜெயித்து வந்தா என்னெல்லாம்
எடுக்கலாம் என்பதும்
நினைத்தால் நினைத்தால் கேவலமே....

‪#‎பூவையர்‬ ஓட்டிச் செல்ல
ஸ்கூட்டி தான் இலவசம்
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி
வாங்கலியோ இலவசம்

நாளெல்லாம் பேச இனி
செல்போனும் இலவசம்
தெரு மீட்டிங் போனா
பீர் பாட்டில் இலவசம்

இலவசமே அசந்து போகும்
எல்லாமே இலவசம் ..

-மோகன் ,சேலம்

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

கஜினி முகமது

வரலாறு முக்கியம் அமைச்சரே - 1

கஜினி முகமது


விடாமுயற்சிக்கு உதாரணமாக சொல்வது கஜினி முகமதுவை. அவன் 17 முறை தோற்றாலும் விடாமல் முயற்சி செய்து வெற்றி பெற்றான் என வரலாறு பாடத்தில் சொல்லி கொடுக்கப்பட்டது. ஆனால் அது உண்மை அல்ல ...

இன்றைய ஆப்கானின் சாமர்கன்ட் பகுதியை சேர்ந்தவன் கஜினி முகமது . பாரசிக பேரரசுக்கு உட்பட்ட அரசில் அமீர் என்ற பொறுப்பில் இருந்த கஜினி , தனக்கென ஒரு படையை உருவாக்கி காந்தகார் உட்பட சில பகுதிகளை பிடித்து தன்னை மன்னனாக அறிவித்து கொண்டான் . பெஷாவர் அருகே நடைபெற்ற போரில் வட இந்திய மன்னன் ஜெயபாலனை வென்று அப்பகுதியை கைப்பற்றினான். இருந்தாலும் அவன் ஆசை எல்லாம் அன்று செல்வ செழிப்போடு இருந்த இந்தியா மீதே இருந்தது. காரணம் அன்று வடஇந்திய அரண்மனைகளிலும் கோவில்களிலும் தங்கம், வைரம் என கொட்டிக்கிடந்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஊரை குறிவைத்து தாக்கினான். அங்குள்ள அரண்மனை, கோவில்களை அழித்து , மக்களை கொன்று சொத்துக்களை கைப்பற்றி கொண்டு ஊர் திரும்புவான். குவாலியர்,உஜ்ஜயினி , மதுரா, துவாரகை , டில்லி , அஜ்மீர் என கிட்டத்தட்ட ஆண்டுக்கு ஒரு ஊரை (கி. பி., 998 முதல் 1030 வரை)அழித்தான்.

கடைசியாக சோமநாதர் ஆலயத்தை தாக்கினான். 50000 பேரை ஒரே நாளில் கொன்றான். 20000 பேரை அடிமையாக பிடித்து சென்றான். சுமார் 1000 யானைகளில் நகைகளை அள்ளிச்சென்றான் .

பள்ளி பாடத்தில் சொல்லி கொடுத்தது போல அவன் 17 முறை தோற்கவில்லை. எல்லா முறையும் வெற்றியே பெற்றான். இரண்டாவது அவன் மாவீரன் அல்ல. கொடூர கொலைகாரன் , கொள்ளையன்.

வரலாறு‬ முக்கியம் அமைச்சரே – 1

வாஸ்கோடகாமா‬

வரலாறு முக்கியம் அமைச்சரே - 2


வாஸ்கோடகாமா‬


இவர்தான் இந்தியாவை கண்டுபிடித்தார். அவர் வந்து இறங்கிய இடம் கள்ளிக்கோட்டை ( கோழிக்கோடு ) . நமக்கு பள்ளியில் சொல்லிக்கொடுத்தது இதுதான். மேலும் அவரை கவுரவப் படுத்தும் வகையில் கோவாவின் ஒரு பகுதிக்கு வாஸ்கோடகாமா என பெயரிட்டுள்ளோம் .

1400-1500 களில் உலகில் மிகவும் செல்வ செழிப்போடு இருந்த நாடு இந்தியா. மிளகு, ஏலக்காய் , தங்கம் , நவரத்தினங்கள் , ஆடைகள் ... என இந்திய பொருட்கள் மீது ஐரோப்பியர்களுக்கு அதிக மோகம். பட்டு பாதை வழியாக சீனர்களும் , மத்திய தரைக்கடல் வழியே கிரேக்கர்களும் இந்திய பொருட்களை அங்கு கொண்டுபோய் விற்பனை செய்தனர். ஆனால் அதிக விலை கொடுக்க வேண்டி இருந்தது . இந்த பாதை வழியாக ஐரோப்பியர்கள் நேரடியாக இந்தியா சென்று வணிகம் செய்ய அனுமதி இல்லை. எனவே கடல் வழியே இந்தியா செல்லும் வழியை கண்டுபிடிக்க போர்சுகல் , ஸ்பெயின் , இங்கிலாந்து மன்னர்கள் முடிவு செய்தனர். மாலுமிகளுக்கு ஏராளமான பணம் கொடுத்து தேட சொன்னார்கள்.

100 ஆண்டு காலம் ஏராளமானோர் முயன்றனர். கடைசியாக 20.5.1498 அன்று கோழிகோடு வந்து சேர்ந்தார் வாஸ்கோடகாமா . அந்த பகுதியை ஆண்ட மன்னர் அவரை வரவேற்று விலைமதிப்பற்ற பொருட்களை பரிசாக அளித்தார். நாடு திரும்பிய அவன் 3 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பி வந்து கண்ணனூர் அருகே வணிகத்தளம் அமைத்தான். சிறிது சிறிதாக சில பகுதிகளை ஆக்கிரமித்தான் . எதிர்த்தவர்களை கொலை செய்தான். கோபமுற்ற மன்னர் அவனையும் அவன் ஆட்களையும் அடித்து துரத்தினார். சில நூறு போர்ச்சுகீசியர்கள் இறந்தனர். மீண்டும் சில ஆண்டுகள் கழித்து ஒரு பெரும் படையுடன் வந்து போர்த்துகீசிய காலனியை இந்தியாவில் உருவாக்கினான். பின்னாளில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை சுரண்டியதற்கும் இவன்தான் காரணம்.

எனவே இந்தியாவிற்கு கடல் வழியை கண்டுபிடித்தவர் வாஸ்கோடகாமா என ஐரோப்பிய பள்ளிகளில் வேண்டுமானால் பெருமையாக் சொல்லி தரலாம் . நமக்கு பெருமை இல்லை. ஏனெனில் அவன் வருவதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கம் , அரேபியா, சீனா, சுமத்திரா என கடல் வணிகம் செய்தவர்கள் நாம். !

‪‎வரலாறு‬ முக்கியம் அமைச்சரே – 2

ஔரங்கசீப்‬

.

வரலாறு‬ முக்கியம் அமைச்சரே – 3


ஔரங்கசீப்‬


சரியான உச்சரிப்பு ஔரங்கஜேப் .பாரசீக மொழியில் ஔரங்கஜேப் என்ற சொல்லுக்கு, அழகிய அரசு சிம்மாசனம் என்று பொருள். ஆலம்கீர் ஔரங்கஜேப் பாதுஷா என்ற பெயரில் ஆண்ட இந்த மன்னரை ஒரு கொடுங்கோலராக நமக்கு பள்ளியில் சொல்லி கொடுத்திருக்கிறார்கள் . இது எவ்வளவு உண்மை...?

தந்தையை சிறையில் அடைத்தவர். சகோதரனைக் கொன்று அரசரானவர். இந்துக்கள் மீது ஜெசியா வரியை விதித்தவர். சிவாஜியை கைது செய்தவர் என்பன .

ஆனால் வரலாற்றை பார்த்தால் எந்த மன்னனுமே பதவி ஏற்கும்போது , தனக்கு போட்டியாக வரும் என நினைப்பவர்களை கொன்று இருக்கிறார்கள். ஔரங்கஜேப்பின் தந்தை ஷாஜஹானும் அப்படிதான் மன்னரானார். அதே போல் ஷாஜஹான் மூத்த மகனுடன் சேர்ந்து சதி செய்து இருந்தாலும் , அவரை கொல்லாமல் வீட்டு சிறையில் வைத்தார்.

இந்துக்கள் மீது மட்டும் ஜெசியா வரி விதித்தார் என பள்ளியில் சொல்லி குடுத்தார்கள். ஆனால் அவர் முஸ்லீம்களுக்கும் வேறு பெயரில் வரி விதித்தார். அதே நேரத்தில் ஏழ்மையானவர்கள் , போரில் குடும்பத்தை இழந்தவர்களுக்கு வரி விலக்கும் அளித்தார். எல்லா மன்னர்களும் வரி வாங்கி தான் ஆட்சி நடத்தினார்கள்.

சிவாஜியை பொறுத்தவரை அவர் ஏதாவது ஒரு முகலாய பகுதியை பிடித்துக் கொள்வார். ஔரங்கஜேப் அதை மீட்பார் . சிவாஜி காலம் முடியும் வரை (25 ஆண்டுகள் )இது தொடர்ந்தது. ஆரம்ப காலத்தில் ஒருமுறை சிவாஜியை கைது செய்தார் . சிவாஜி தப்பிவிட்டார்.

சாதனைகள்
-------------------

1. அகண்ட பாரதத்தை ஆண்ட ஒரே மன்னர் இவர் மட்டுமே. இன்றைய ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் , வங்கதேசம் முதல் மதுரை வரை அவர் சாம்ராஜ்யம் விரிந்து இருந்தது.

2. மதுவை தொடாதவர். அரசு கஜானாவை தனது சொந்த செலவிற்கு இவர் பயன்படுத்தியது கிடையாது. தனக்காக ஆடம்பர செலவில் மாளிகைகள் கட்டியது இல்லை

3. 20 ஆண்டுகள் இளவரசராக பல போர்களை வழி நடத்தினார். 50 ஆண்டுகாலம் பேரரசராக ஆட்சி புரிந்தார். இந்த சாதனை இவரை தவிர யாரும் செய்ததில்லை.

4. ''தனது மரணத்திற்கு பின் தனது இறுதிச்சடங்கிற்கு தன் வாழ்நாளில் திருகுரான் எழுதியும், தொப்பி தைத்தும் விற்பனை செய்து சேர்த்து வைத்த சிறு தொகையை மட்டுமே செலவு செய்ய வேண்டும். ஆடம்பர கல்லறை கட்டக் கூடாது'' என உயில் எழுதி வைத்தார். [இதை எழுதிய போது பரத கண்டம் முழுதும் அவர் ஆட்சி செய்து கொண்டிருந்தார்.!]

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

மோகன் தேர்தல் அறிக்கை 2016

மோகன் தேர்தல் அறிக்கை 2016


1. தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரி , குளங்களும் தூர்வாரப்படும் . ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். ஏரி , குளங்களுக்கு தனி அமைச்சர் நியமிக்கப்படுவார்.
2. குளிர்பான நிறுவனங்கள் , மினரல் வாட்டர் நிறுவனங்கள் , அதிக நீர் உபயோகிக்கும் தொழிற்சாலைகள் போன்றவை கடலோரத்திற்கு மாற்றப்படும். கடல்நீரை சுத்திகரித்துப் பயன்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் முழு வரிவிலக்கு அளிக்கப்படும்.
3.சிறு வணிக நிறுவனங்கள் ஒரே துறையின் கீழ் கொண்டுவரப்படும். தொழிலாளர் நலன் , எடை முத்திரை ஆய்வு , உணவு பாதுகாப்பு , உள்ளாட்சி வரிகள் , வணிக வரி ...எல்லாம் ஒரே அலுவலகத்தின் கீழ் கொண்டுவரப் படும்.
4. ஆன்லைன் வர்த்தகத்திற்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் ( 2 கோடி வணிகர்களின் வாழ்வாதாரம் வெறும் 20 நிறுவனங்களால் பாதிக்கப்படுகிறது )
5. டோல்கேட்கள் அரசுடமையாக்கப்படும்.
6. விளைநிலங்கள் பிளாட் போடுவது குற்றமாக அறிவிக்கப்படும். குறைந்தது 10 ஆண்டுகள் விவசாயம் செய்யாமல், அரசு மின்சாரம் , மானியம் போன்றவற்றை பயன்படுத்தாமல் இருந்தால் மட்டுமே பிளாட் போட அனுமதிக்கப்படும்.
7. அடுக்குமாடி குடியிருப்புகள் , வணிக வளாகங்கள் , ஹோட்டல்கள் போன்றவற்றில் கழிவுநீர் சுத்திகரிப்பு , மழைநீர் சேகரிப்புக்கு மும்பையில் உள்ளது போல ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது கட்டாயம் ஆக்கப்படும்.
8. அனைத்து நகரங்களிலும் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கப்படும் .
9. அனைத்து காய்கறிகளுக்கும் குறைந்த பட்ச விலை ரூ.10 ஆக நிர்ணயிக்கப்படும். அதற்கு கீழே விலை வரும் போதெல்லாம் அரசு மையங்களில் 10 ரூபாய் விலையில் கொடுத்துவிடாம்.
10. ஆற்று மணல் அள்ள தடை விதிக்கப்படும். அதற்கு பதிலாக கிரஷர் மணல் பயன்படுத்தப்படும் .
11. ஒவ்வொரு துறைக்கும் சகாயம் போன்ற நேர்மையான அதிகாரி தலைவராக நியமிக்கப் படுவார். ஒரு நேர்மையான அதிகாரி இருந்தால் 1000 ஊழல்வாதிகளை கட்டுப்படுத்தமுடியும்.
12. அணு உலைகள் மூடப்படும் .
13. தமிழகத்தில் உள்ள குண்டு பல்ப் , சோடியம் மெர்குரி பல்ப்கள் , டியூப் லைட் போன்றவற்றிற்கு பதிலாக LED பல்புகள் மாற்றினால் 5000 மெகாவாட் மின்சாரம் மீதி ஆகும் . இது கூடங்குளம் அணு உலையில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தைவிட 5 மடங்கு அதிகம். உடனடியாக நடைமுறைப் படுத்தப்படும் . குறைந்த மின்சாரத்தில் இயங்கும் LED விளக்குகளுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும்.
14. +2 தேர்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கும் 5 லட்ச ரூபாய் , அவன் ஆசிரியர்களுக்கு தலா 1 லட்சம் , அந்த பள்ளியை மேம்படுத்த 1 கோடி வழங்கப்படும்.
15. தன் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் படிக்கவைக்கும் அரசு ஊழியர்களுக்கு மாதம் 5 ஆயிரம் சம்பளம் அதிகமாக தருவோம். ( ஆசையை தூண்டினால் தான் வேலை ஆகும் )
எதிர்காலத்தில் நான் ஆட்சிக்கு வந்தால் இவை அனைத்தும் நிறைவேற்றுவேன் என உறுதி அளிக்கிறேன்.
-மோகன், சேலம் .

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

தேவை ஒரு சுறுசுறுப்பான முதல்வர்

 தேவை ஒரு சுறுசுறுப்பான முதல்வர்


இது அரசியல் பதிவுதான் . ஆனால் அனைவரும் படிக்க வேண்டிய அவசியமான பதிவு .

சுறுசுறுப்பாக மக்களோடு பழகும் ஒரு முதல்வர் தமிழகத்திற்கு கிடைக்க மாட்டாரா...

வயோதிகத்தில் கலைஞர்
நடக்க முடியாத பிரச்சனையில் ஜெயலலிதா 
தைராய்டு, டான்சில் , கல்லீரல் பிரச்சனைகளில் விஜயகாந்த்
ஏதோ பெரிய பிரச்சனைக்காக லண்டனில் சிகிச்சை பெற்றுவரும் ஸ்டாலின்
இருதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் உள்ள இளங்கோவன் 

இவர்களை தவிர்த்து பார்த்தால் அன்புமணி மட்டுமே ஆரோக்யமான நபராக இருக்கிறார். அவர் முதல்வர் வேட்பாளராக சொன்னாலும் இந்த தேர்தலில் அவர் முதல்வராகும் வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இல்லை. ஸ்டாலின் நமக்கு நாமே என எல்லா ஊரும் சுற்றி காட்டினாலும் அவை எல்லாமே மிகவும் பக்காவாக திட்டமிடப்பட்டு தினமும் ஒரு மணிநேரம் நடத்தப்பட்ட நிகழ்சிகள் . முதல்வர் ஆனால் அவரால் மக்களோடு இறங்கி பணிபுரிய முடியுமா என்பது கேள்விக்குறி . மேலும் ஸ்டாலினின் ஆரோக்கியம் குறித்து அழகிரி ஒருமுறை சொன்னதும் அதற்கு கலைஞர் வருந்தியதும் தெரிந்த விஷயம்.

வைகோ சுறுசுறுப்பாக மக்களோடு மக்களாக காலத்தில் நிற்ப்பவர்தான். ஆனால் அவரும் முதல்வர் போட்டியில் இல்லை. சகாயம் போன்றவர்கள் எல்லாம் வெறும் கனவு நாயகர்கள் மட்டுமே. அப்படியென்றால் யாருக்குமே வயதாகாது , நோய் வராது என சொல்லவில்லை . 8 கோடி மக்களின் தலைவர் அந்த மக்களுக்காக காலத்தில் நிற்கவேண்டும் என சொல்கிறேன்.

அப்துல் கலாம் அய்யா இறக்கும் நொடி வரை மக்களோடு இருந்தார். 88 வயது பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் இன்னமும் வாரம் ஒரு குக்கிராமத்திற்கு சென்று மக்களை சந்திக்கிறார். 70 வயது உம்மன் சாண்டி ரயிலில் மக்களோடு பயணிக்கிறார். சர்ச் வாசலில் தரையில் அமர்ந்து மக்களோடு பேசுகிறார்.70 வயது ரங்கசாமி பைக்கில் போகிறார். டீக்கடையில் நின்று டீ குடிக்கிறார். 60 வயதை கடந்த சந்திரபாபு நாயுடு பெருமழையின் போது சாலையில் இறங்கி போராடுகிறார். சாக்கடையில் இறங்குகிறார். அரவிந்த் கேஜ்ரிவாலை பற்றி சொல்ல தேவையில்லை .
தமிழகத்தை பொறுத்தவரை காமராஜரின் கால்கள் மட்டுமே தமிழகத்தின் குக்கிராமதிற்கும் சென்றது . அதன் பின் எம்ஜியார் வாகனத்தில் சென்றவாராவது மக்களை சந்தித்தார். அதன் பிறகான இந்த 30 ஆண்டு காலத்தில் தேர்தல் பிரசாரத்தின் போதும் , பொதுக் கூட்டங்களிலும் மட்டுமே முதல்வரை பார்க்க முடியும் என்று ஆனது.

இத்தனை லட்சம் உறுப்பினர்களை கொண்ட திமுகவிலும் , அதிமுகவிலும் ஒரு இளம் தலைவரை உருவாக்குவது முடியாத காரியமில்லை. செய்யவேண்டும். அதே நேரத்தில் இவர்களின் அனுபவம் பெரியது . எனவே பின்னால் இருந்து வழி நடத்தட்டும்.

எங்களுக்கு தேவை மக்களோடு இருக்க கூடிய ஒரு தலைவர் அவ்வளவுதான். கேரளாவைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.

செவ்வாய், 29 மார்ச், 2016

லிண்ட்சே‬ லோஹன் w/o மாரியப்பன்

லிண்ட்சே‬ லோஹன் w/o மாரியப்பன்

- வா. மணிகண்டன்


அட்டகாசமான சிறுகதை தொகுப்பு. மின்னல் கதைகள் என குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர் . உண்மையிலேயே மின்னல் கதைகள் தான். ஒரு சராசரி மனிதனின் பார்வையில் நடக்கும் சம்பவங்கள் . ஆனால் முடிவுகள் அதிர்ச்சி தரும் அல்லது ஆச்சர்யம் தருகிறது. சில கதைகளில் நம்மை பொருத்தி பார்க்க முடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஆழ்மனதில் சில விபரீத ஆசைகள் இருக்கும் . அவை யாருக்கும் தெரியாமலே நிராசை ஆகி விடும் .

பல கதைகள் இது போன்ற மனிதனின் மனோபாவத்தை உரசிப் பார்க்கிறது. அதே நேரத்தில் மிகவும் நுணுக்கமாகவும் எழுதி இருக்கிறார். உதாரணமாக 50களில் நடக்கும் ஒரு கதையில் நெல் அரிசியின் அருமை, அளவுமுறை போன்றவை , சாதிகள் குறிப்பிடப் படும் கதைகளில் முகத்தில் அறையும் உண்மைகள் .... படித்துப் பாருங்கள் .உங்களுக்கு ஒரு புதிய வாசிப்பு அனுபவம் கிடைக்கும். யாவரும் வெளியீடு.

ஆன்லைனில் வாங்க ....

http://discoverybookpalace.com/products.php…

வியாழன், 17 மார்ச், 2016

டார்வின் ஸ்கூல்



டார்வின் ஸ்கூல்


''குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் - டார்வின்'' . இதை தவிர நமக்கு டார்வினைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் அது கூட தவறுதான். குரங்கும் மனிதனும் ஒரே மூதாதையரிடம் இருந்து வந்தவை என்றே டார்வின் சொன்னார். டார்வினின் கோட்பாடுகளை அழகாக எளிமை படுத்தி கொடுத்துள்ளார் ஆசிரியர் ஆயிஷா நடராஜன். 


இயற்கையை இத்தனை எளிமையாக யாரும் சொல்லி கொடுக்கவில்லை. விலங்குகள் படிக்கும் ஒரு கற்பனை பள்ளிக்கூடம் (டார்வின் ஸ்கூல் ) . அதில் வரும் விலங்குகளின் வழியாக உலகின் தோற்றம், உயிரினங்களின் தோற்றம் , பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் வாழ்க்கை முறை , இயற்கையை அழிக்கும் மனிதன் ... என அட்டகாசமான பதிவு.
இது குழந்தைகளுக்கான நூல் மட்டும் அல்ல. ஒவ்வொரு பெரியவர்களும் படிக்க வேண்டிய நூல் .

ஆன்லைனில் வாங்க...
http://discoverybookpalace.com/products.php?product=டார்வின்-ஸ்கூல்

செவ்வாய், 1 மார்ச், 2016

மெனிஞ்சியோமா




- கணேச குமாரன்


உடல்நலமின்றியோ அல்லது விபத்தில் சிக்கியோ மாதக்கணக்கில் , வருடக்கணக்கில் படுக்கையில் இருப்பவர்களை நாம் சந்தித்திருப்போம் , கடந்து வந்திருப்போம் . அவர்களின் வலியையும் ஒரு சின்ன பரிதாபத்தோடு கடந்திருப்போம். ஆனால் அந்த வலியை உணர்ந்திருக்கிறீர்களா..

சந்துருவுக்கு மூளையில் உள்ள கொழுப்பை நீக்க ஆப்ரேஷன் நடக்கிறது. ஆப்ரேசனுக்கு முன்னும்,பின்னும் , மருத்துவமனையிலும் வீட்டிலும் அவன்படும் வேதனையை ஒவ்வொரு வரியிலும் உணர்த்துகிறார் கணேசன் . 


அறுவை சிகிச்சைக்குப்பின் ஒரு சொட்டு நீருக்காக தவிப்பதாகட்டும் , ஒரு துளி சிறுநீர் பிரிவதாகட்டும் .. வார்த்தைகளிலேயே வலியை நமக்கு கடத்துகிறார் . சந்துரு , அவன் அப்பா காளிதாஸ் மற்றும் மருத்துவ அறிவியல் மூன்றின் வழியாகவும் பயணிக்கிறது கதை. சுஜாதாவின் "தலைமைச்செயலகம்" எனக்கு மூளை பற்றிய அறிவியலை தந்தது. கணேச குமாரனின் மெனிஞ்சியோமா மூளைப் பற்றிய உணர்வியலை தந்தது.

"பைத்தியருசி" நூலுக்கு சற்று முன்னர்தான் கணேசகுமாரன் எனக்கு நண்பர் மூலம் அறிமுகம் ஆனார். ஆனால் வாடா மாப்ளே என அழைக்கும் அளவுக்கு உரிமை எடுத்துக்கொள்ளும் நண்பன் . கணேசகுமாரனின் "மிஷன் காம்பவுண்ட்" என்ற சிறுகதை தொகுப்பு பிப்ரவரி 14 அன்று வெளிவரவுள்ளது. அதோடு சேர்த்து மெனிஞ்சியோமாவையும் சேர்த்து வாங்கிப் படிப்பது உங்களுக்கும் கணேசனுக்கும் நன்மை பயக்கும்.

ஆன்லைனில் வாங்க....
http://discoverybookpalace.com/products.php?product=மெனிஞ்சியோமா

மிஷன் காம்பவுண்ட்



மிஷன் காம்பவுண்ட்




குலசாமிக்கு பலியிட ஆடு வளர்ப்பவன் அதன் மீது வைத்த பாசப் போராட்ட மன உளைச்சலில் தன்னையே பலிகொடுக்கும் இசக்கி (குலசாமியைக் கொன்றவன்);
இரண்டாவது மனைவியாக வாக்கப்பட்டு அன்பும், தியாகமும் வெளிஉலகுக்கு புரியாவிட்டாலும் கடைசிவரை நேர்மையாய் வாழ்ந்து சாகும் சுசீலா (அப்பாவின் காதலிக்கு... )


நாகர்கோவில் மண் வாசனையுடன் காதல் வாழ்க்கையின் வலி , வலியால் சந்தேகம் , சந்தேகத்தின் பலி .. என உருக்கும் மனிதர்கள் ( மிஷன் காம்பவுண்ட் ) ;
யானையின் கனவு முதல் வானத்தின் கனவு வரை சிதைக்கும் மனிதம் ( யானையின் கனவில் .... )

ஜி.கே , உறை , வாக்குமூலம் , தனி .... எல்லாமே தனிமையில் உழலும் மனிதர்களின் கனவு ,வலி , வன்மம் , காமம் , ஏக்கம் , நட்பு , துரோகம் , தற்கொலை எண்ணங்கள்.. என ஆழ்மனத்தின் வலியையும் , வக்கிரங்களையும் வீரியமாக பதிவு செய்கிறார் ஒவ்வொரு கதையிலும் . கதையாக இவை எல்லாமே அருமையானவை. சொந்த பாதிப்பும் உள்ளது எனில் மீண்டு வா கணேசா...


மிஷன் காம்பவுண்ட்
தக்கை பதிப்பகம் , சேலம் .

புத்தகம் தேவைப்படுவோருக்கு...
டிஸ்கவரி புக் பேலஸ் , சென்னை Ph:044-65157525 ,9940446650

கணேசகுமாரன் , சென்னை
98409-24906

குற்றப் பரம்பரை



குற்றப் பரம்பரை 

- வேல ராம மூர்த்தி


ஜுனியர் விகடனில் கூட்டாஞ்சோறு என்ற தலைப்பில் தொடராக வந்தது . இவ்வளவு வீரியமான கதைக்கு "குற்றப் பரம்பரை" என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்பதால் பெயர் மாற்றப் பட்டது.


இந்த புத்தகத்தை முதலில் சில பக்கங்கள் படித்தேன். சில பக்கங்களிலேயே தெரிந்துகொண்டேன் இது ஓரே மூச்சில் படிக்கவேண்டிய நூல் என்று. காலை ,மாலை, இரவு , அதிகாலை என மூன்றே நாளில் படித்து முடித்த பிறகுதான் கீழே வைக்க முடிந்தது.

நூறாண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வாழ்ந்த இரண்டு இன மக்களின் வரலாறு.. ரத்தமும் சதையும் அன்பும் துரோகமும் கலந்து வீரியமாக எழுதியுள்ளார் வேல.ராமமூர்த்தி . இது அவரின் முப்பாட்டன் கதை தான். நிச்சயமாக இந்த நூல் காலம் கடந்து நிற்கும் தமிழ் பொக்கிஷங்களில் ஒன்றாக இருக்கும்.

குற்றப்பரம்பரை
வேல.ராமமூர்த்தி
விலை . ரூ .400
ஆன்லைனில் வாங்க ..
.

http://discoverybookpalace.com/products.php?product=குற்றப்-பரம்பரை